கூட்டரசு அரசாங்கத்தின் எந்தவொரு நிதி உதவியும் இல்லாமல், 2026 ஆம் ஆண்டுக்கான 'சுக்மா' (Sukma) விளையாட்டுப் போட்டிகளைச் சிலாங்கூர் மாநில அரசு மிகச் சிறப்பாக நடத்திக் காட்டும் என்று அதன் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
ஷா ஆலாம் அகுவாதிக் மையத்தின் பெயர் மாற்றும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் 52 இடங்களில் நடைபெறவுள்ள இப்போட்டிகளுக்கான இறுதிக் கட்டத் தயாரிப்புகளில் சிலாங்கூர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"கூட்டரசு அரசாங்கத்திடம் இருந்து நேரடியாக எந்த நிதியும் கிடைக்காதது ஆரோக்கியமற்ற ஒரு நடைமுறையாகும். இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டும் முறையான காரணம் எதுவும் கூறப்படவில்லை. இருப்பினும், இனி நாங்கள் கூட்டரசு அரசாங்கத்திடம் நிதி உதவி கோரப் போவதில்லை. மாநில அரசின் சொந்த நிதியைக் கொண்டு, 50 மில்லியன் ரிங்கிட்டிற்கும் குறைவான செலவில் இப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவோம்," என்று நஜ்வான் ஹலிமி உறுதியளித்தார்.
சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா மற்றும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.








