பேரா, சுங்கை சிப்புட், டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஒரு லட்சத்து 30 ஆயிரட்ம ரிங்கிட் மதிப்பில் அமையவிருக்கும் புதிய பாலர் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா, பேரா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டான்ஸ்ரீ எம். ராமசாமி தலைமையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான முழுமையான மொத்தச் செலவையும் தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் ஏற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கட்டட அனுமதி, மின்சார இணைப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடைமுறைச் சிக்கல்களால் இக்கட்டுமானப் பணி தாமதமடைந்திருந்தது. பள்ளி மேலாளர் கே. கிருஷ்ணன் அப்பாசாமி உரையாற்றுகையில், டான்ஸ்ரீ ராமசாமியின் நேரடி தலையீட்டாலும், தொடர் ஆதரவாலும் மட்டுமே அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு, இத்திட்டம் இன்று வெற்றிகரமாக உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று நன்றியோடு குறிப்பிட்டார்.
விழாவில் டான்ஸ்ரீ ராமசாமி பேசுகையில், "தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்வி நிலையங்கள் மட்டுமல்ல, அவை நம் மொழி, பண்பாடு மற்றும் சமூக அடையாளத்தைப் பாதுகாக்கும் மையங்கள். ஒற்றுமையுடன் செயல்பட்டால் எந்தவொரு பெரிய இலக்கையும் சாதிக்க முடியும் என்பதை இந்த விழா நிரூபித்துள்ளது" என வலியுறுத்தினார்.
மேலும், கல்வி அமைச்சு விதித்துள்ள நிபந்தனைகளின்படி, பள்ளித் தலைமையாசிரியரும் இத்திட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்புப் பணிகளில் இணைந்து செயல்பட்டிருப்பது பாராட்டக்கூடியது என்று டானஸ்ரீ இராமசாமி குறிப்பிட்டார்.
தொழில்நுட்பக் காரணங்களால் பாலர் பள்ளி கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்பாட்டாலும், இதற்கான முயற்சியை மேற்கொண்ட தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகி டத்தோ பா. சகாதேவனுக்கு பள்ளி மேலாளர் வாரியத் தலைவரும், தோட்ட நிர்வாகியுமான ஜெகதீஸ்ராவ் அப்பளசாமி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், ம.இ.க. நிர்வாகிகள், கூட்டுறவுச் சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









