பேரா மாநிலத்தில் அதிக மாணவர்களைக் கொண்டு விளங்கும் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளேபாங் தமிழ்ப்பள்ளியின், பல ஆண்டு காலக் கனவான புதிய மூன்று மாடி இணைக்கட்டடத்திற்கான பூமி பூஜை இன்று பள்ளி வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
மடானி அரசாங்கத்தின் கீழ், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியத் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கிய சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ், இப்பள்ளிக்கு 35 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டு, இந்த ஆரம்பக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2005–2006ஆம் ஆண்டுகளில் தோட்டப்பகுதியில் இயங்கி வந்த இப்பள்ளி, 2015இல் ஜாலான் கோலகங்சார் பிரதான சாலையோரத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய கல்வித் துணை அமைச்சர் தியோ நீ சிங் பதவிக்காலத்தில் இந்த 12 புதிய வகுப்பறைகளைக் கொண்ட 4ஆவது இணைக்கட்டடத் திட்டம் முன்மொழியப்பட்டது. எனினும், அரசியல் மாற்றங்கள் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இத்திட்டம் நீண்டகாலமாகத் தாமதமடைந்தது.
தற்போது, தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரதமரின் அலுவலகத்தின் மூலம், நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டத்தோ ஆர். சுரேஷ்குமார், "பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் சமூகத்தினரின் நீண்டகாலக் கோரிக்கையான இக்கட்டடத்தின் அதிகாரப்பூர்வ கட்டுமானப் பணிகள் அடுத்த வாரம் தொடங்கவுள்ளன" என உறுதியளித்தார்.
இத்திட்டம் நனவாகப் பள்ளியின் தேவையை நேரில் பார்வையிட்டுப் பச்சைக்கொடி காட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு, பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கிருஷ்ணசாமி முத்துசாமி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இத்திட்டத்திற்கு அடித்தளமிட்ட முன்னாள் தலைமையாசிரியர் திருமதி பத்மினி, பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் சமூகத்தினரின் கூட்டு ஒத்துழைப்பையும் அவர் சிறப்பாக நினைவுகூர்ந்தார்.
நவீன வசதிகளுடன் அமையவிருக்கும் இப்புதிய கட்டடம் விரைவில் நிறைவடைந்து, மாணவர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்கும் என்ற பலத்த நம்பிக்கையுடன் இந்த பூமி பூஜை விழா இனிதே நிறைவுற்றது.












