2027 ஆம் ஆண்டு இரட்டைப் பிரிவு மாணவர் சேர்க்கை முன்னேற்பாடுகளில் தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வெற்றிவேலன் மகாலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அளவிலான தமிழ்ப்பள்ளி தொண்டு அமைப்புகளின் தலைவர்கள் நடவடிக்கை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வெற்றிவேலன் மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2027-ஆம் ஆண்டின் வரலாற்று சிறப்புமிக்க இரட்டைப் பிரிவு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வி அமைச்சின் முன்னேற்பாடுகளைத் தங்களின் கூட்டமைப்பு வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
4 லட்சத்து 78 ஆயிரத்து 419 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், புதிய வகுப்பறைகள் மற்றும் 3,150 ஒப்பந்த ஆசிரியர் நியமனம் மூலம் கல்வி வசதிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சி பாராட்டுக்குரியது என அவர் கூறியுள்ளார்.
எனினும், இக்கூடுதல் வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தோட்டப்புற, கிராமப்புற மற்றும் பின்தங்கிய சூழலில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வெற்றி வேலன் வலியுறுத்தியுள்ளார். மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பால் வகுப்பறைகளில் நெரிசலோ, தரம் குறைபாடோ அல்லது ஆசிரியர் பற்றாக்குறையோ ஏற்படாதவாறு நீண்டகால திட்டமிடல், டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் தொடர் கண்காணிப்பு அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.











