ஈப்போ, ஜூன்.14-
பேராக் மாநில இந்தியர் காற்பந்து சங்க குழுவின் ஏற்பாட்டில் 18-ஆவது ஆண்டாக நடைபெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான காற்பந்துப் போட்டி இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
காலை 8 மணிக்குத் தொடங்கிய போட்டிகள் மாலை 5 மணியளவில் நிறைவடைந்ததாக அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் வரதராஜு மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதிலிருந்தும் 28 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், பெண்கள் பிரிவில், முதலாம் இடத்தில், லாடாங் கேசூட் தமிழ்ப்பள்ளியும், இரண்டாம் இடத்தில் ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியும், மூன்றாம் இடம் சங்காட் தமிழ்ப்பள்ளியும், நான்காம் இடத்தில் கம்பார் தமிழ்ப்பள்ளியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஆண்கள் பிரிவில் முதல் இடத்தில், பத்தாங் ராப்பிட் தமிழ்ப்பள்ளியும், இரண்டாம் இடத்தில் நோவஸ் கோஷியா 2 தமிழிப்பள்ளியும், மூன்றாம் இடத்தில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியும், நான்காம் இடத்தில் சித்தியாவான் மகாகணேசா வித்யாசாலை தமிழ்ப்பள்ளியும் வெற்றி பெற்றுள்ளன.

இதனிடையே, போட்டியை நடத்துவதற்காக 30 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கிய பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசனுக்கும், கணிசமான நிதியுதவி வழங்கிய அம்மாநில இந்தியர் காற்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமலுடின் முகமது இஸ்மாயிலுக்கும் வரதராஜு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








