ஈப்போ இரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு, ‘கே.எல். சென்ட்ரல்’ முன்மாதிரியில் ‘ஈப்போ சென்ட்ரல்’ நகர மேம்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தால் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி, மூன்று இந்து ஆலயங்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டுத் தலம் ஆகியவை அகற்றப்படமாட்டாது என்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் உறுதியளித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈப்போ கல்லுமலை. அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தான மண்டபத்தில் பேராக் மாநில இந்து சங்கத்தின் 49-வது மாநாட்டிற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவநேசன், பேரா மாநில வளர்ச்சி முக்கியம் என்றாலும் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் ஆலயங்களின் நலனைப் பாதுகாப்பது மாநில அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றார்.
மேலும், சங்கீத சபா தமிழ்ப்பள்ளி விளையாட்டுத் திடல் மாநகர மன்ற பராமரிப்பில் நவீன விளையாட்டு மையமாக மேம்படுத்தப்படும் என்றும், இது பல்லின ஒற்றுமையையும் சுற்றுலாவையும் பிரதிபலிக்கும் மையமாகத் திகழும் என்றும் கூறினார். மலேசிய இரயில்வே துறையுடன் இந்திய சமூகத்திற்கு இருக்கும் நீண்டகால வரலாற்றுத் தொடர்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இதனிடையே, பேரா மாநிலத்தில் நிலவி வந்த ஆலய நிலப் பிரச்சினைகளுக்குச் சுமூக தீர்வு கண்டு, மாநில இந்து சங்க வளர்ச்சிக்கு 49 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்கிய டத்தோ சிவநேசனுக்குப் பேராக் மாநில இந்து சங்கத் தலைவர் பொன். சந்திரன் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமய சேவையாற்றிய உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டதோடு, மலேசிய இந்து சங்கத் துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், உதவித்தலைவர் டத்தோ மோகன் ஷான் உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே மலேசிய இந்து சங்கத்தின் பேரா மாநில பேரவைத் தலைவர் பொன். சந்திரன் பேசுகையில், மாநில இந்து சங்கத்திற்கு 49 ஆயிரம் ரிங்கிட்டை மானியமாக வழங்கிய டத்தோ சிவநேசனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த ஆண்டுக்கூட்டத்தில் பேரா மாநிலத்தில் உள்ள இந்து சங்கப் பொறுப்பாளர்கள் திராள கலந்து சிறப்பித்தனர்.









