மலேசியாவில் உள்ள சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகளில், ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்டமான PPKI கீழ் பயிலும் மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு முதல் சீனம் மற்றும் தமிழ் மொழிப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மலாக்கா, ஆலோர்காஜாவில் நேற்று புதன்கிழமை தொடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான மடானி கல்வி சீர்த்திருத்தை நோக்கி, மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான டிஜிட்டல் தலைமைத்துவ கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை அமைச்சர் வோங் கா வோ இதனைத் தெரிவித்தார்.
2027-ஆம் ஆண்டுக்கான புதிய தேசியப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறப்புக் கல்வி மாணவர்கள் பிற்காலத்தில் சாதாரண வகுப்பு மாணவர்களுடன் இணைந்து பயிலும்போது, அவர்களுக்குத் தாய்மொழி அறிவு அவசியமாகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், குறைந்த எண்ணிக்கையிலான 30-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த ஆண்டு ஸ்மார்ட் டிவி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு மித்ரா அமைப்பின் மூலம் 387 தமிழ்ப்பள்ளிகளுக்கு இத்தகைய நவீன கல்விச் சாதனங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வோங் கா வோ சுட்டிக்காட்டினார்.








