கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த எஸ்.ஜே.கே.டி. சுங்கை பகார் புதிய பள்ளிக் கட்டடத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, 2027ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் நிறைவடையும் என்ற கல்வி அமைச்சர் ஃபட்லினா சைடெக் இன் அறிவிப்பை, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வரவேற்றுள்ளார்.
இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக நீண்டகாலமாக பல்வேறு தரப்புகளுடன் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போதைய முன்னேற்றம் அந்த முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திட்டத்திற்காக 12.67 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சர் ஃபட்லினா சைடெக் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தத் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் இந்திய சமூகத்திற்குக் கிடைத்த நம்பிக்கையின் அடையாளம் என்றும், தமிழ்ப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் புதிய கட்டடத் தேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் கோபிந்த் சிங் டியோ கூறினார்.








