பெட்டாலிங் ஜெயா தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 43-வது பள்ளி விளையாட்டுப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணியளவில் அப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இலக்கவியல் அமைச்சரும், டாமன்சாரா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் இடம் பெற்றன.
அதேவேளையில் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கான போட்டிகளும் இடம் பெற்றன.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கோபிந்த சிங் டியோ, டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தமது அலுவலகமானது, 1 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் நிதியுதவி அளித்து, அதன் மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முக்கியமான நிறுவனங்கள் எனக் குறிப்பிட்ட கோபிந்த் சிங், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கமான பிஐபிஜியின் சிறப்பான ஒத்துழைப்பையும் வெகுவாகப் பாராட்டினார்.
கடந்த 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரை, நாடெங்கிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் பராமரிப்பு, மேம்பாடு மற்றும் புதிய வசதிகளை அமைப்பதற்காக மொத்தம் 237.48 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார சவால்களை மலேசியா எதிர்கொண்டு வந்தாலும் கூட, தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதை இந்த நிதி ஒதுக்கீடு நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இளைய தலைமுறையினருக்கு சிறந்த கற்றல் சூழலை உருவாக்க, கல்வி வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








