நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இலக்கவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தித்தியான் டிஜிட்டல் அமைப்பான பி.தி.டி.எம் நடத்தும் மாநில மற்றும் தேசிய அளவிலான ஐசிடி போட்டிகளுக்கான பதிவு மற்றும் படைப்புச் சமர்ப்பிப்பு இறுதி நாள் வரும் ஜூலை 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்ப்பள்ளிகளிலிருந்து தேசிய மேடைக்கு” என்ற இலக்குடன் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்போட்டியில் ஓவியம், சிறுவர் நிரலாக்கம், இரு பரிமாண அசைவூட்டல், இணையதள வடிவமைப்பு மற்றும் இணையவழி புதிர்ப்போட்டி என 5 பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிர்ப்போட்டி மட்டும் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி இணையவழியில் நேரலையாக நடைபெறும். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழும், பள்ளி அளவிலான பி.ஏ.ஜெ.எஸ்.கே மதிப்பெண்களும் வழங்கப்படும்.

மாநில அளவில் தகுதிபெறும் மாணவர்கள், வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி சைபர்ஜெயா மல்டிமீடியா பல்கலைக்கழகமான எம்.எம்.யூ வளாகத்தில் நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் போட்டியிடுவர். தேசிய அளவில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குக் கைக்கணினி , வெற்றிக்கிண்ணம், சான்றிதழ்கள் மற்றும் பி.ஏ.ஜெ.எஸ்.கே மதிப்பெண்கள் பரிசாக வழங்கப்படும்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிவுப் படிவம் மற்றும் விதிமுறை கையேடு வழியே உடனடியாகப் பதிவு செய்யுமாறு திட்டத்தின் தலைவர் குனசேகரன் கருப்பையா கேட்டுக்கொண்டுள்ளார். கூடுதல் விவரங்களுக்கு திருமதி இமைச்சாரனி (014-306 7868) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.










