சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்து கட்டண உதவியாக தலா 300 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 3,452 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

மேலும், மாணவர் ஒருவருக்கு 300 ரிங்கிட் வீதம் வழங்கப்பட்ட நிலையில், இத்திட்டத்திற்காக மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் பள்ளிப் பேருந்து கட்டண உதவித் திட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு இனிசியாதிவ் பெடுலி ரக்யாட் (Inisiatif Peduli Rakyat) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் தோட்டப்புறங்களில் வசிக்கும் பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை இலக்காகக் கொண்டிருந்த இந்தத் திட்டம், 2020-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் முழுவதும் உள்ள் பி40 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

குறைந்த வருமானம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், இந்த நிதியுதவியைப் பெற்ற மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்ப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் 51 பள்ளிகளின் நிலம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக வீ. பாப்பாராய்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு மற்றும் தணிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, ரவாங் தமிழ்ப்பள்ளி தொடர்பான பிரச்சினையில் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடெக், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் ஆகியோருடன் இணைந்து சுமூகமான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாப்பாராய்டு உறுதியளித்துள்ளார்.








