தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளுக்கான கூட்டரசு அரசாங்கத்தின் சிறப்பு நிதி தொடர்பான முழு விவரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் நடைபெற்ற மடானி திருவிழா நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களின் தேவைகளும், பல்வேறு கல்வி முறைகளின் தேவைகளும் நியாயமான முறையில் கவனிக்கப்படும் என உறுதியளித்தார். அதேவேளையில் எந்தவொரு சமூகமும் புறக்கணிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்குவது, தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளை புறக்கணிப்பதாக அர்த்தமல்ல எனவும் அன்வார் தெளிவுபடுத்தினார். இப்பள்ளிகளுக்கான உதவிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு சுமார் இரண்டு வாரங்களில் கோலாலம்பூரில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
தாம் 2022-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், நீண்ட காலமாக போதிய உதவிகள் கிடைக்காமல் இருந்த போண்டோக் மற்றும் தாஃபிஸ் பள்ளிகளுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் அரசாங்க உதவிகள் மீண்டும் வழங்கப்பட்டதாகவும், 2024-ஆம் ஆண்டில் அந்த உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட்டதாகவும் அன்வார் கூறினார்.
மேலும், போண்டோக் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினிப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மற்ற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், போண்டோக் பள்ளிகள் பின்தங்குவதை அனுமதிக்க முடியாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.








