ஜோகூர் மாநில வரலாற்றில் முதல்முறையாக ஜோகூர்பாரு, தேசிய வகை ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளிக்கு அதிகாரப்பூர்வ வருகை தந்த மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி, பள்ளியின் மேம்பாட்டிற்காக 2 லட்சம் ரிங்கிட் சிறப்பு நிதியை அறிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரிங்கிட் மட்டுமே கோரியிருந்த நிலையில், பள்ளியின் தேவைகளை நேரடியாக ஆய்வு செய்த மந்திரி பெசார், கூடுதல் வசதிகளுக்காக நிதியை அதிகரித்து வழங்கினார்.
இந்த நிதியின் மூலம் பள்ளி மண்டபம், கூரையிடப்பட்ட பாதை, மின்சார சுவிஸ் அமைப்பு, தண்ணீர் பம்ப் மற்றும் இதர உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன. நிகழ்வில் பேசிய மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ், 'பாங்சா ஜோகூர்' ஒற்றுமை சிந்தனையே 2030-க்குள் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் என்றார். மேலும், இப்பள்ளியில் படித்து ஏர்ஏசியா விமானியாகவும், லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பயிலும் ஜோகூர் இளம் விருது பெற்ற மாணவராகவும் சாதனை படைத்த இரு முன்னாள் மாணவர்களை அவர் முன்மாதிரியாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
முன்னதாக, மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற மந்திரி பெசார், தலைவர்களை ஊடகங்களில் மட்டும் பார்க்காமல் நேரில் சந்திப்பது மாணவர்களுக்குப் பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே தேசிய வகை துன் அமினா தமிழ்ப்பள்ளிக்கு அளித்த வாக்குறுதியின்படி பயன்பாட்டுக் கட்டணங்களை மாநில அரசு செலுத்தியதை நினைவுகூர்ந்ததுடன், மலாய், சீனம், தமிழ் அனைத்துப் பள்ளிகளின் நலன்களும் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் கெமேலா சட்டமன்ற உறுப்பினர் கே. ரவிக்குமார், காஹாங் சட்டமன்ற உறுப்பினர் வி.ருகிந்திரன், ஜோகூர் கல்வி துணை இயக்குநர் ஹாஜி கமால், பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ எஸ். கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.








