நாடு முழுவதும் அன்னையர் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், ஜோகூர் மாசாய் தமிழ்ப்பள்ளியில் பெற்றோர்களுக்கான சிறப்புப் பட்டறை ஒன்று நேற்று சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய தமிழ் அறவாரியத்தின் முன்னெடுப்பில், முன்னாள் தலைமையாசிரியர் பஞ்சா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பட்டறை, இம்பாக் எனப்படும் ‘பெற்றோரும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவலாம்’ எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டது.
பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்தவும், பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்றல் திறன்கள், நிதி நிர்வாகம் மற்றும் வளமான வாழ்வு உள்ளிட்ட 10 முக்கியத் தலைப்புகளில், 10 வாரங்களுக்கு இந்தப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
வெறும் 10 ரிங்கிட் கட்டணத்தில் நடத்தப்படும் இப்பட்டறையில் 10 வாரங்களுக்குப் பிறகு பங்கேற்பாளர்களுக்கு 'சிறந்த பெற்றோர்' சான்றிதழ் வழங்கப்படும். மேலும், வசூலிக்கப்படும் அனைத்து கட்டணமும் மலேசிய தமிழ் அறவாரியத்திற்கு அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




























