பினாங்கில் உள்ள அனைத்து 28 தமிழ்ப் பள்ளிகளும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தைப் பெறுவதை உறுதி செய்ய பினாங்கு மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்புக் குழு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு நில உரிமை பெற்றுத் தரப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் மற்ற பள்ளிகளுக்கும் நில உரிமை பெற்றுத் தரப்படும் என அதன் தலைவர் டாத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார்.
கல்வித்துறை துணை அமைச்சர் வங் கா வோ முன்னிலையில் இன்று நடைபெற்ற ராஜாஜி தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டடக் கட்டுமான அனுமதி ஆவணம் வழங்கும் விழாவில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இதனை தெரிவித்தார்.
மேலும், மேம்பாட்டாளரின் நிறுவன சமூக கடப்பாடு திட்டத்தின் கீழ் இந்த ராஜாஜி தமிழ்ப் பள்ளி புதிய இடத்தில் கட்டப்படுவதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. மேலும், நீண்டகாலமாகத் தாமதமாகி வந்த சுங்கை பக்காப் மற்றும் ஜூரு தமிழ்ப் பள்ளிகளின் திட்டங்கள் உட்பட மொத்தம் மூன்று தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்கப்படவுள்ளதாக பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டாத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, சிறப்புக்குழுவின் துணைத் தலைவர் கெல்வின் என்ற குமரன் கிருஷ்ணனும் உடன் இருந்தார்.









