பேராக் மாநிலம் தஞ்சோங் மாலிமில் உள்ள தோட்டப்புற தமிழ்ப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள Drone அறை முயற்சிக்கு மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோ சாங் லி காங் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
நேற்று எஸ்.ஜே.கே.டி. லாடாங் கத்தோயாங் தமிழ்ப் பள்ளியில் ட்ரோன் அறையை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் சாங் லி காங், ட்ரோன் தொழில்நுட்பம் மாணவர்களை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான கல்வியைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கும் தனித்துவமான திறன் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரோன்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஈர்ப்பும், ஊடாடும் தன்மையும் கொண்ட கற்றல் முறையையும் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அணுகுமுறை மூலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பள்ளி மாணவர்களுக்கு எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதோடு, அதனுடன் தொடர்புடைய அறிவை ஆராயும் ஆர்வத்தையும் வளர்க்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பள்ளி மட்டத்திலேயே புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.








