இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் நடைபெற்ற 'ரோட் டு கோடேவர் 7.0' அனைத்துலக அளவிலான போட்டியில் பங்கேற்று பினாங்கு மற்றும் மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர் ஆறு தமிழ் பள்ளி மாணவர்கள். கடுமையான போட்டிகளைக் கொண்ட 20 நாடுகளின் 280 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சுங்கை அரா தமிழ்ப்பள்ளி மற்றும் பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மலேசியா சார்பில் கலந்து கொண்டனர்.
இதில், சுங்கை அரா தமிழ் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த “ஈக்கோபாட் சார்ட்டர்” என்ற ஸ்மார்ட் கழிவு பிரித்தெடுக்கும் முறைமை திட்டம், நான்காம் ஆறுதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளது.
இம்மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, பினாங்கு மாநில தமிழ் பள்ளிகளுக்கான சிறப்பு பணிக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள், மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொம்தாரில் (KOMTAR) உள்ள தமது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அங்கீகாரமாக ஒவ்வொரு மாணவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், தலா 300 ரிங்கிட் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவித்தார்.
தமிழ் பள்ளி மாணவர்கள் 21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஸ்டெம் கல்வி மற்றும் செயற்கை நுண்ணறிவான AI துறைகளில் தொடர்ந்து உலகளவில் சாதனை படைக்க பினாங்கு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு உறுதியளித்தார்.













