நெகிரி செம்பிலான், லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய பள்ளி கட்டடத்திற்காக நிதி திரட்டும் விருந்து நிகழ்வு சிரம்பான், ரீஜண்ட் மண்டபத்தில் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், நிறுவனப் பொறுப்பாளர்கள், பள்ளி வாரியக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், பெற்றோர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டு நிகழ்விற்கு ஆதரவு நல்கினர்.
நிகழ்விற்குத் தலைமை தாங்கிய சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தோணி லோக் பேசுகையில், "லாபு தோட்டம் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான ஒட்டுமொத்த செலவு கிட்டத்தட்ட 9 மில்லியன் ரிங்கிட் ஆகும். இதில் பாதிச் செலவை மேம்பாட்டாளர் நிறுவனம் ஏற்கும் வேளையில், பிரதமரின் 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, இரண்டு நிறுவனங்களின் தலா 1 மில்லியன் ரிங்கிட் பங்களிப்பு மற்றும் இன்றைய விருந்து நிகழ்வின் மூலம் எஞ்சிய 4.5 மில்லியன் ரிங்கிட் நிதி திரட்டும் இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளது என்றார்.
"குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட இப்பள்ளிக்காக, பண்டார் ஸ்ரீ செண்டாயன் அருகேயுள்ள மலேசியன் விஷன் வேலி பகுதியில் மாநில அரசு 6 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. அங்கு அமையவிருக்கும் புதிய வளாகம், எதிர்காலத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 4 மாடிகளுடன் மிகவும் நவீனமாகவும் விசாலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன கற்றல் சூழலுக்கு ஏற்ப 12 வகுப்பறைகள், அறிவியல் மற்றும் கணினி அறைகள் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இதில் இடம்பெறவுள்ளன. இப்பள்ளியை முழுமையான அதிநவீன வளாகமாக மாற்றுவதே இந்த நிதி திரட்டும் நிகழ்வின் முக்கிய நோக்கமாகும் என்று அந்தோணி லோக் விவரித்தார்."
"கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்குப் பின் பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அதேவேளையில், திட்டமிட்டபடி இந்த நிதி திரட்டும் பிரம்மாண்ட நிகழ்வை சாத்தியமாக்கி, அதனை மகத்தான வெற்றிப் பாதையில் வழிநடத்திய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமாரின் இடைவிடாத உழைப்பையும், அசாத்தியமான தலைமைத்துவத்தையும் அந்தோணி லோக் நெஞ்சம் உருக வெகுவாகப் பாராட்டினார்."
தொடர்ந்து பேசிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமார், "எஞ்சிய 4.5 மில்லியன் ரிங்கிட்டைத் திரட்டுவதற்கு சிரம்பானில் உள்ள இந்தியர்கள், தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்கள் தங்களின் பேராதரவை வழங்கி இந்த நிதி திரட்டலை வெற்றியாக்கியுள்ளனர்" எனக் குறிப்பிட்டார்.
இறுதியாக, பள்ளி வாரியக்குழுத் தலைவர் நவஜீவன் இராமசாமி பேசுகையில், இந்த உன்னதமான நிதி திரட்டும் நிகழ்வு மிக பிரம்மாண்டமாக வெற்றி பெறுவதற்குத் துணையாக நின்ற அனைத்து நன்கொடையாளர்கள், தலைவர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
ஒருங்கிணைந்த சமூகப் பங்களிப்பின் மூலம் இப்பள்ளியின் நிதி திரட்டும் விருந்து நிகழ்வு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இவற்றுடன், இந்த விருந்து நிகழ்வில் பாரம்பரிய நடனங்களும் இடம் பெற்று ஒட்டுமொத்த நிகழ்விற்கும் மேலும் மெருகூட்டியது.




















