நாட்டின் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், மொத்தம் 20.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 'மடானி தளவாடப் பொருளுதவி' மற்றும் 'கல்வி மடானி' திட்டங்களை மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று உத்வேகத்துடன் தொடங்கி வைத்தார்.
கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடேக் முன்னிலையில், ஜோகூர் பாரு ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் இந்த பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் சமத்துவக் கொள்கைக்குச் சான்றாக இத்திட்டங்கள் அமைந்துள்ளன.
முதற்கட்டமாக 12.8 மில்லியன் ரிங்கிட் செலவில் நாடு முழுவதும் உள்ள 361 அரசு உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நவீன மேசைகள், நாற்காலிகள், மின்விசிறிகள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டு, 39,692 மாணவர்கள் மற்றும் 5,290 ஆசிரியர்கள் நேரடியாகப் பயனடைகின்றனர். மறுபுறம், 8 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் 'கல்வி மடானி' திட்டத்தின் கீழ், 315 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள பி40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,410 மாணவர்களுக்கு இலவச மாலை நேரப் பயிற்சி வகுப்புகள், சத்தான மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வின் உச்சகட்டமாக, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் மேலும் இரண்டு முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இவ்வாண்டுக்கான மித்ரா வரவு-செலவுத் திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகம், மெட்ரிகுலேஷன் மற்றும் பவுண்டேஷன் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக 5,000 நவீன புத்தம் புதிய மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், நிதிப்பற்றாக்குறையால் கடந்த ஆண்டு விடுபட்ட எஞ்சிய 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் 'திறன் பலகைகள்' வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ஏற்கனவே 388 பள்ளிகளில் இந்தத் தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள பள்ளிகளுக்கும் இந்த அதிநவீன வசதி விரிவுபடுத்தப்படுவதை மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் உறுதிப்படுத்தியுள்ளார்.
"கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகெலும்பு; தரமான மனித மூலதனத்தை உருவாக்குவதே மடானி அரசாங்கத்தின் இலக்கு," என்று அமைச்சர் ரமணன் தமது பிரதான உரையில் உறுதிபடக் கூறினார்.









