பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டிற்காக மலேசியத் தமிழ் நெறிக் கழகம் மற்றும் பள்ளியின் ஆசிரியர் கழகம் இணைந்து நடத்திய ‘புதையல் வேட்டை’ போட்டி இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 7 மணிக்கு விளக்கக் கூட்டத்துடன் தொடங்கிய நிகழ்வை, 8 மணிக்கு கோலசிலாங்கூர் எம்.பி. டாக்டர் சூல்கிப்லியின் பிரதிநிதி சிவபாலன், தலைமையாசிரியர் திருமதி பெண்ணரசி மற்றும் கனல் வீரன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இதில் 47 மகிழுந்துகளில் மொத்தம் 188 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இப்பயணம், பெஸ்தாரி ஜெயாவிலிருந்து தொடங்கி ஈஜோக் மற்றும் கோலா சிலாங்கூர் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. சாலைக் குறியீடுகளைக் கவனித்து சவாலான வினாக்களுக்கு விடைகாணும் வகையில் இந்தப் போட்டி அமைந்திருந்தது.
வெற்றியாளர்கள் விவரம்:
• முதலிடம்: குழு "பீனிக்ஸ்" (இராஜேந்திரன், கீதா) – RM 1,500 பரிசு.
• இரண்டாமிடம்: குழு "குலுலெஸ்" (கோகிலா, தவகுமார், மலர், சுமித்ரா) – RM 1,000 பரிசு.
• மூன்றாமிடம்: குழு "திவின் துர்போ" (பிரகாஷ், ரூபிண்டர், ஆர்யன், ஜெய்வன்) – RM 700 பரிசு.
தலைமையாசிரியர் திருமதி பெண்ணரசி பேசுகையில், "பங்கேற்பாளர்கள் வாங்கிய பொருட்கள் அனைத்தும் மாணவர்களுக்கே வழங்கப்பட்டன" எனக் கூறி நன்றியைத் தெரிவித்தார். தமிழ் நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன், இது தங்களின் 3-வது நிதி திரட்டும் முயற்சி என்றும், மற்ற பள்ளிகளுடனும் இணைந்து பணியாற்றத் தயார் என்றும் குறிப்பிட்டார்.















