மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் நிலவும் டிஜிட்டல் இடைவெளி மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக வலுவூட்டல் & சமூக வழிகாட்டல் இயக்கமான ஏசிஇ எச்சரித்துள்ளது. நாட்டின் 523 தமிழ்ப் பள்ளிகளில் நடத்திய தேசிய அளவிலான ஆய்வின் அறிக்கையை அவ்வமைப்பு இன்று வெளியிட்டது.

அறிக்கையின்படி, 68 விழுக்காடு தமிழ்ப் பள்ளிகளில் கல்வி அமைச்சின் கணினி ஆய்வகங்கள் இல்லை என்றும், 56 விழுக்காடு பள்ளிகளில் முறையான தொழில்நுட்ப வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாடு முன்னேறும் வேளையில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கே இந்த அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பாதிக்கும் என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிள்ளான் பள்ளத்தாக்கில் பெற்றோர் நிதிப் பங்களிப்போடு பள்ளி நேரத்திலேயே வெற்றிகரமாக நடந்து வந்த தகவல் தொழில்நுட்ப வகுப்புகளுக்குச் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை தடை விதித்துள்ளதையும் ஏசிஇவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.










