கூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியின் புதிய இணைக்கட்டடப் பணிகளுக்காக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 4.2 மில்லியன் ரிங்கிட் நிதியை அங்கீகரித்துள்ளார். இத்தகவலை செனாய் சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வோங் போ யாங் தெரிவித்துள்ளார்.
தொகுதியில் உள்ள அனைத்து மொழிப்பள்ளிகளின் அடிப்படை வசதிகளையும், அவற்றின் தொடர் மேம்பாடுகளையும் அரசாங்கம் முதன்மையாகக் கருதி வருவதாகக் குறிப்பிட்ட வோங் போ யாங், இந்த நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளியின் புதிய இணைக்கட்டடக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த 4.2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, மலேசியாவில் உள்ள அனைத்துச் சமூக மாணவர்களின் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தற்போதைய அரசு கொண்டுள்ள நல்நோக்கத்தைக் காட்டுகிறது. கூலாய் பெசார் தமிழ்ப்பள்ளிக்குக் கிடைக்கவிருக்கும் புதிய வசதிகள், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு சிறந்த கற்றல் சூழலை உருவாக்கிக் கொடுக்கும். செனாய் மற்றும் கூலாய் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளின் நலனில் வோங் போ யாங் காட்டும் அக்கறை, அப்பகுதியின் கல்வி வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.








