சிரம்பான், லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடேக் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வங் கா வோ ஆகியோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
இந்த விழாவில், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள் குமார் சிறப்பு பிரமுகராக கலந்துகொண்டு சிறப்பித்தார். எம்.வி.வி சிட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இந்திய சமூகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் மாநில அரசு கொண்டுள்ள தீவிர அக்கறையையும் ஆதரவையும் அவர் தனது வருகையின் மூலம் முன்னிலைப்படுத்தினார்.
சுமார் 9 மில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த நவீனப் பள்ளி வளாகத்திற்கு, மேட்ரிக்ஸ் கான்செப்ட்ஸ் நிறுவனம் 50 விழுக்காடு நிதியுதவி வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகை பள்ளி வாரியம் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு மூலம் திரட்டப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த புதிய வளாகத்தில் 12 வகுப்பறைகள், அறிவியல்-கணினி அறைகள், மழலையர் பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின், மேட்ரிக்ஸ் கான்செப்ட்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கெல்வின் லீ, இணை தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸி சீ, என்.எஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நோராசார் மூசா, மாநில கல்வி இயக்குநர் காலிதா பிந்தி ஹாஜி ஓமார் மற்றும் பள்ளி வாரியத் தலைவர் நவஜீவன் ராமசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
86 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட வரலாற்றைக் கொண்ட லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியின் இந்த கட்டுமானத்திற்கு நிதி திரட்டுவதில் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து அமைச்சரமான அந்தோணி லோக்கின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என்று கட்டுமானப்பணியை முன்னெடுத்துள்ள நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமார் தெரிவித்தார்.
தற்போது சுமார் 20 மாணவர்களுடன் இயங்கும் இப்பள்ளி, எம்.வி.வி சிட்டி நகரம் மேம்பாடு காணும்போது அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று பயன்பெறும் ஒரு முக்கியக் கல்விக்கூடமாக மாறும் என அருள்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.










