கோலாலம்பூர், பிப்ரவரி.09-
பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தபடி, 'மடானி' அரசாங்கத்தின் அனைவருக்குமான அடிப்படை ரஹ்மா உதவித்தொகையான சாரா இன்று பிப்ரவரி 9 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட 22 மில்லியன் தகுதியுள்ள மலேசியர்களுக்கு தலா 100 ரிங்கிட் ஒருமுறை வழங்கக்கூடிய தொகை மைகார்ட்டில் சேர்க்கப்படும்.
இத்தொகையை இவ்வாண்டு டிசம்பர் 31 வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தனிநபர் அடிப்படையில் வழங்கப்படுவதால், ஒரு குடும்பத்தில் எத்தனை பெரியவர்கள் உள்ளனரோ அத்தனை பேருக்கும் தலா 100 ரிங்கிட் கிடைக்கும்.
உதாரணமாக, கணவன், மனைவி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட இரு பிள்ளைகள் இருந்தால், அந்த குடும்பத்திற்கு மொத்தம் 400 ரிங்கிட் வரை உதவித்தொகை கிடைக்கும். இது மாதாந்திர சாரா உதவித்தொகை பெறுபவர்களுக்கு கூடுதல் பலனாகும் என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் தகுதி நிலை மற்றும் மேல் விபரங்கள் குறித்து அறிய விரும்பினால், சாரா அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தின் மூலமாகவோ அல்லது LHDN MySTR தளம் வழியாகவோ சரி பார்த்துக் கொள்ளலாம்.








