Jan 8, 2026
Thisaigal NewsYouTube
மத்திய அரசின் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயன் பெறும்
தமிழ் பள்ளி

மத்திய அரசின் 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயன் பெறும்

Share:

ஜார்ஜ்டவுன், ஜனவரி.07-

நாடு முழுவதும் உள்ள தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள 50 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி மூலம், பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள் பயன் பெறவுள்ளன.

இது குறித்து பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிலைக் குழுவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு கூறுகையில், ஒவ்வொரு பள்ளியின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் இந்த நிதி விநியோகிக்கப்படும் என்றார். மேலும், 2008-ஆம் ஆண்டு முதல் பினாங்கு அரசு பின்பற்றி வரும் நடைமுறைப்படி, இந்த உதவித்தொகை நேரடி பணமாக வழங்கப்படாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

மத்திய அரசின் இந்த நிதி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கற்றல் வசதிகள் மற்றும் STEM பாடத்திட்டங்கள், ரோபோட்டிக்ஸ் (Robotics) வகுப்புகள் உள்ளிட்ட மாணவர் மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பினாங்கு மாநில அரசு ஏற்கனவே 2025-ஆம் ஆண்டிற்காக தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவ 2.42 மில்லியன் ரிங்கிட் வழங்கியுள்ளதாக சுந்தராஜூ குறிப்பிட்டார். இந்த மாநில நிதி மூலம் வகுப்பறைகளில் புதிய வெள்ளை பலகைகள் (whiteboards), ஸ்மார்ட் பலகைகள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் இதர டிஜிட்டல் வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 30 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த மத்திய அரசின் ஒதுக்கீடு, இந்த ஆண்டு 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டதற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மத்திய அரசின் இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்த பிரதமரின் அறிவிப்பை முதலமைச்சர் சாவ் கோன் இயோவ் வரவேற்றார். "அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கற்றல் சூழலைச் சீரமைக்கவும் நீண்ட காலமாக உதவி தேவைப்படும் தாய்மொழிப் பள்ளிகளுக்கு இந்த நிதி உயர்வு மிகவும் முக்கியமானது," என்று அவர் கூறினார். அடிப்படை வசதிகள், உபகரணங்கள், தளவாடங்கள் மற்றும் கற்பித்தல் பொருட்களுக்குத் தொடர்ச்சியான நிதி தேவைப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

2008 முதல் பினாங்கில் உள்ள பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டிருந்தாலும், நில உரிமை போன்ற சிக்கல்கள் இன்னும் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"தமிழ் பள்ளிகளுக்கான இந்த ஒதுக்கீடு இந்தியச் சமூகத்திற்கு ஓர் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது," என்று வலியுறுத்திய சாவ் கோன் இயோவ், தேசியக் கல்வி முறையில் தமிழ்ப்பள்ளிகளின் பங்கு மற்றும் பங்களிப்பிற்கு இது ஓர் அங்கீகாரமாகும் என்றார்.

முன்னதாக, தைபேயில் நடைபெற்ற 2025 உலக ரோபோ விளையாட்டுகளில் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற பினாங்கு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 24 பேரை முதலமைச்சர் பாராட்டி கௌரவித்தார்.

Related News