கோலாலம்பூர், டிசம்பர்.09-
மடானி அரசாங்கத்தின் கீழ் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகள் உட்பட எந்தவொரு தாய்மொழிப் பள்ளியும் மூடப்படாது என்று கல்வி அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.
நாட்டில் தமிழ், சீனம் உட்பட தாய்மொழிப் பள்ளிகளின் நிலைப்பாடு குறித்து 1996 கல்விச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தாய்மொழிப் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம் குறித்து கேள்விக்குட்படுத்தவோ அல்லது சர்ச்சை செய்யவோ முடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இன்று பிற்பகலில் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தலைமையில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு Smart Board எனும் திறன் பலகை வழங்கும் நிகழ்வில் திடீர் வருகை புரிந்த கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.

தாம் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் தமிழ், சீனப்பள்ளிகள் உட்பட தாய்மொழிப் பள்ளிகள், கல்விச் சட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதை தாமும், கல்வி துணை அமைச்சர் வொங் கா வோவும் வலியுறுத்தி வருவதை ஃபாட்லீனா சுட்டிக் காட்டினார்.

சில நேரங்களில் தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் என்று வைரலான கதைகள் உள்ளன. ஆனால், எந்தவொரு தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது என்பதற்கு நிகழ்விற்கு தலைமையேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன், மகளிர் மற்றும் தாய்மார்கள் முன்னிலையில் தாம் உறுதி கூறுவதாக ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.








