ஜார்ஜ்டவுன், அக்டோபர்.24-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான பினாங்கு, மலாக்கோவ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நிலப்பட்டாவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

நில மேம்பாட்டாளர் நிறுவனமான SP Setia- வுடன் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த மலாக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நிலப் பிரச்னைக்கு, இறுதியில் தீர்வு காணப்பட்டு, நில உரிமையும் பெறப்பட்டுள்ளதாக பிறை சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
மலாக்கோவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 2025 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்த நிகழ்வில் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு, பள்ளியின் நிலப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு இருப்பதை அறிவித்ததுடன் நிலப்பட்டாவையும் காட்டினார்.

பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கைக் குழுத் தலைவர் என்ற முறையில் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் நிலப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது தமது தலையாய பணி என்று ஏற்கனவே தாம் அளித்துள்ள வாக்குறுதிக்கு ஏற்ப மலாக்கோவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நிலப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
இந்நிலையில் 4 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு வழங்கியுள்ள SP Setia நிறுவனத்திற்கும், நிலத்தை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த ஊராட்சி மன்றத்திற்கும் தாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் பள்ளிக்குச் சொந்த நிலம் கிடைப்பதற்கு போராடி வந்த மலாக்கோவ் தோட்டப் பள்ளி நிர்வாகம், குறிப்பாக, பள்ளி தலைமையாசிரியர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்திற்கும் இவ்வேளையில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.








