பேரா, குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நல்லெண்ண விருந்தோம்பல்’ நிதி திரட்டும் நிகழ்ச்சி, ஈப்போ கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி மேலாளர் வாரியக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் அச்சலிங்கம், பள்ளியின் இந்த அரிய முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநில அரசாங்கத்தின் மானியமாக 40 ஆயிரம் ரிங்கிட் வழங்கிச் சிறப்பித்தார்.
பள்ளியின் கட்டிட மேம்பாடு, கற்றல் வளங்கள் மற்றும் மாணவர் நலத் திட்டங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய டத்தோ சிவநேசன், "தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்குச் சமூக ஒற்றுமையும், கூட்டு ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்" என வலியுறுத்தினார்.
குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி உதவிக்கரம் புரிந்த பெற்றோர்களுக்கும், பொது மக்களுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ். மகேந்திரன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மாணவர்களின் கலைப் படைப்புகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் நிகழ்வுகள் வருகை புரிந்திருந்த பெற்றோர்களையும், சமுதாயத் தலைவர்களையும் வெகுவாகக் கவர்ந்தன.
சிம்பாங் புலாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நேர்மறையான முயற்சி, கல்வியின் மீது சமூகத்திற்கு உள்ள அக்கறையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது என அனைவரும் பாராட்டினர்.











