ஈப்போ, ஆகஸ்ட்.23-
நாட்டில் குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளை மூட வேண்டிய அவசியமில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளையில் மாணவர்களின் கல்வி அணுகலைப் பாதிக்காமல் மிகவும் கட்டமைக்கப்பட்டதாக இருப்பதை உறுதிச் செய்ய பல அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் 30 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு ஆகிய வகுப்புகளை இணைக்கும் அணுகுமுறையையும் தாங்கள் மேற்கொண்டு வருவதாக வோங் கா வோ கூறினார்.
இன்று ஈப்போ ஓம் ஸ்ரீ வீரமுத்து கோயில் மண்டபத்தில் கிந்தா உத்தாராவில் தமிழ்ப்பள்ளிகளுக்கான சீரமைப்புக்கு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் துணை அமைச்சர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் 30 மாணவர்களுக்கும் குறைவான 3,038 பள்ளிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பள்ளிகளை மூடுவதைத் தடுக்க ஆகக் கடைசி நடவடிக்கையாக மக்கள் அடர்த்தி நிறைந்த புதிய பகுதிகளில் அப்பள்ளிகளை இடம் மாற்றும் அணுகுமுறை கையாளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைச் சார்ந்தும், பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு மூலமாகவும் மட்டுமே இது சாத்தியமாகும் என்று வோங் கா வோ விளக்கினார்.
கிராமப்புறங்களில் கூட குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசாங்கம் தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது என அவர் விளக்கம் அளித்தார்.

இந்த ஆண்டு நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளுக்கு கல்வி அமைச்சு வெ. 19.09 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த முறை சற்று அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 18.15 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது என்று வோங் கா வோ கூறினார்.
பேராக் மாநிலத்தில் மட்டும், இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு 4.43 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொகை 4.13 மில்லியன் ரிங்கிட்டாக இருந்தது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

அனைத்து ஒதுக்கீடுகளும் அந்தந்த பள்ளிகளுக்குத் தேவையான பராமரிப்பு அல்லது மேம்பாடுகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, கிந்தா உத்தாரா மாவட்டத்தில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு எட்டு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் நிதியை வோங் கா வோ வழங்கினார்.
கல்வி அமைச்சு இன பாகுபாடின்றி அனைத்து பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.