நாட்டின் பல்லினக் கல்விச் சூழலில் தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும், அதன் மேம்பாட்டிற்கு கல்வி அமைச்சு என்றும் துணையாக இருக்கும் என்றும் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ உறுதியளித்துள்ளார். இன்று காலையில் நடைபெற்ற சிரம்பான், லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளியில் கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
பல ஆண்டு காலமாலக நீடித்து வந்த நிலப் பிரச்சினைக்கு, நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமாரின் தீவிர முயற்சியால் வெறும் 10 மாதங்களில் சுமுகத் தீர்வு காணப்பட்டு இன்று கட்டுமானப் பணிகள் தொடங்கியிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை என்று வோங் கா வோ பாராட்டினார்.
தேசியக் கல்வி அமைப்பின் கீழ் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளின் கல்வித் தேவைகளை அறிந்து, அவசியமான இடங்களில் இடமாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளைச் செய்ய கல்வி அமைச்சு எப்போதும் உரிய பரிசீலனைகளை வழங்கும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படும் என்றும் வோங் கா வோ தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளிக்கு சுமார் 86 ஆண்டு கால நெடிய மற்றும் பெருமைமிக்க வரலாறு உண்டு என்றும், ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் திரளாக வந்து கல்வி பயின்ற உன்னதமான அடையாளமாக இப்பள்ளி விளங்கியது என்றும் அதன் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் நவஜீவன் இராமசாமி நெகிழ்ச்சியோடு விவரித்தார்.
தற்போது 20 மாணவர்களுடன் இயங்கும் இப்பள்ளி, எம்.வி.வி சிட்டி நகரம் மேம்பாடு காணும்போது மீண்டும் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று பயன்பெறும் ஒரு முக்கியக் கல்விக்கூடமாக மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












