கிள்ளான், டிசம்பர்.06-
நாட்டில் மிகப் பழமையான தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான கிள்ளான், ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் இணைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநிலத்தில் 1,209 மாணவர்கள் பயிலும் இரண்டாவது மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் இணைந்து இணைக் கட்டடத்தைக் கட்டுவதற்கு வகை செய்துள்ளனர்.

குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், பள்ளி தலைமையாசிரியர் திருமதி கோகிலவேணி, பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மகேந்திரன் வரதன், அவர் தலைமையிலான பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு இணைக் கட்டடம் கட்டுவது குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாப்பாராய்டு, இணைக் கட்டடத்திற்கு அடித்தளமிட்ட பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மகேந்திரன் வரதன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், பள்ளி தலைமையாசிரியர் கோகிலவேணி மற்றும் இதர பொறுப்பாளர்களுக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பல தமிழ்ப்பள்ளிகள் மூடுவிழா காண்கின்றன என்று சிலர் சொல்கின்றனர். ஆனால், ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தொடர்ந்து இருக்குமானால் பள்ளி இணைக் கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்கலாம் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மகேந்திரன் கூறுகையில் பள்ளி இணைக் கட்டடம் கட்டும் திட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ள பாப்பாராய்டுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.








