சென்னையில் நடைபெற்ற ஏழாவது இந்தியன் அபாகஸ் தேசிய ஒலிம்பியாட் போட்டியில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உலகளாவிய மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் வென்ற மலேசியாவின் 8 வயது இளம் கணித மேதை ஹரிஷ்வாணன் சரவணன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாகத் தாயகம் திரும்பினார்.
நெகிரி செம்பிலான், சங்காய் சிரம்பான் தோட்ட தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஹரிஷ்வாணன் சரவணன், லண்டன் சாதனைப் புத்தகம் மற்றும் சர்வதேச அபாக்கஸ் உலக உச்சிமாநாடு பரல் கட்டை மனக்கணக்குப் போட்டிகளிலும் முத்திரை பதித்து, சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் பெற்ற மாபெரும் வெற்றிக் கோப்பைகளுடன் கம்பீரமாகத் தாயகம் திரும்பியபோது ஹரிஷ்வாணன் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. சங்காய் சிரப்மான் தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் உறவினர்கள் திரளாகத் திரண்டு, மாணவன் ஹரிஷ்வாணன் மற்றும் அவரது பெற்றோர் சரவணன் - ஷாமளா ஆகியோருக்கு மாலைகள் அணிவித்தும் வாழ்த்தொலிகளை எழுப்பியும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் இந்த உற்சாக வரவேற்பை அளித்தனர்.
விமான நிலையத்தில் தமது மகன் ஹரிஷ்வாணன் சாதனை குறித்து கணவர் சரவணனுடன் பகிர்ந்து கொண்ட தாயார் திருமதி ஷாமலா, சிறுவயதிலேயே பேச்சுத்திறன் குறைபாடு கொண்டிருந்த தங்கள் ம கன், 2 வயதில் தங்களுடன் காரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது நிகழ்த்திய சாதனை தங்களை வியக்க வைத்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

"வார்த்தைகள் தடுமாறினாலும், ஹரிஷ்வாணனின் லட்சியம் தடுமாறவில்லை! பேச்சுத்திறன் குறைபாட்டைத் தனது தன்னம்பிக்கையால் வென்று, அனைத்துலக அபாகஸ் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிப்பேன் என்று மாணவன் ஹரீஷ்வணன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

8 வயதிலேயே உலக அரங்கில் மலேசியாவின் கொடியைப் பறக்கவிட்டு, அசாத்திய கணிதத் திறமையால் சங்காய் சிரம்பான் தோட்ட தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கும் நம் நாட்டிற்கும் வரலாற்றுப் பெருமையைத் தேடித்தந்துள்ளார் இளம் சாதனையாளர் ஹரீஷ்வணன். விமான நிலையத்தில் திரண்டிருந்த அவரது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் இந்த உற்சாக வரவேற்பு, இவரைப் போன்ற பல இளம் திறமையாளர்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.









