கூலிம், டிசம்பர்.16-
கெடா, கூலிம் டப்ளின் பிரிவு 7 தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் தரம் எப்பொழுதும் காக்கப்படும் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் மு.வடிவேல் உறுதி கூறியுள்ளார்.
கெடா மாநிலத்தில் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை பட்டியலில் இடம் பெற்றுள்ள கூலிம் டப்ளின் பிரிவு 7 தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பரிசளிப்பு விழா அப்பள்ளியின் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இப்பரிசளிப்பு விழாவைக் கெடா மாநில வாரியக் குழுச் சங்கத்தின் துணைச் செயலாளர் என். பன்னீர்செல்வன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இவ்விழாவில் தலைமையுரை நிகழ்த்திய பள்ளியின் தலைமையாசிரியர் வடிவேல், மாணவர்கள் கல்விப் புறப்பாட நடவடிக்கையில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பத்து மாணவர்களைக் கொண்ட இப்பள்ளியில் ஆறாம் ஆண்டு கல்வி பயின்ற 4 மாணவர்கள் இடைநிலைப்பள்ளிக்குச் செல்கின்றனர். இதன் மூலம் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இப்பள்ளியில் ஆறு ஆண்டு காலம் கல்விப் பயின்ற இந்த நான்கு மாணவர்களும் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இந்தப் பரிசளிப்பு விழாவில் அவர்களைக் கௌரவிப்பதில் பள்ளி பெருமையாக கொள்கிறது என்று வடிவேல் குறிப்பிட்டார்.
மேலும் இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மணியம், வாரியக் குழுவின் ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் என்ற கல்சிவா, தலைவர் சுரேஸ் ராவ் ஆகியோர் முயற்சியில் பள்ளிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதையும் வடிவேல் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
பள்ளி வாரியத் தலைவர் சுரேஸ் கூறுகையில், பள்ளி மாணவர்களின் மேன்மைக்கு 24 வகையான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டுக்கான இந்த பரிசளிப்பு விழாவில் 10 மாணவர்களுக்கும் பல பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் மாணவர்கள் அவர்களின் படைப்புகளையும் வருகையாளர்கள் முன் சிறப்பாக ஒப்புவித்தனர்.








