பாங்கோக், நவம்பர்.28-
தாய்லாந்தில் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள 12 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் இதற்கு முன் இல்லாத வகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 36 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு உள்கட்டமைப்பு மற்றும் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 145 ஆக அதிகரித்துள்ளது. அதில், கோங்க்லா மாவட்டத்தில் மட்டும் 110 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களில் பலரைக் காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
வெள்ள நீர் வடியத் தொடங்கிய பகுதிகளில் மீட்புப் படையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால், சாலைகள், வீடுகள், வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. சேதமடைந்து காணப்படும் சாலைகள், தரையில் விழுந்து கிடக்கும் மின்சார கம்பங்கள், சகதிகளில் சிக்கிக் காணப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.








