ஶ்ரீநகர், செப்டம்பர்.24-
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் பயங்கரவாதிகளுக்கு உதவிய குற்றவாளியைப் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இது முக்கியத் திருப்புமுனையாக இருக்கும் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்.,22ம் தேதி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள அவர்களின் முகாம்கள் மீது ' ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ் இந்தியா அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்ட போலீசார் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் முதல் கைது நடவடிக்கையைப் போலீசார் எடுத்துள்ளனர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு உதவியதாக முகமது கட்டாரியா என்ற நபரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் ஆப்பரேஷன் மகாதேவ் பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் முகமது கட்டாரியா பயங்கரவாதிகளுக்கு உதவியது தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.