சனா, செப்டம்பர்.21-
ஏமனில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 31 பேர் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து, அந்நாட்டின் மீது 2023ம் ஆண்டு முதல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக, ஏமனில் அதிபர் மாளிகை, கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள், மின் நிலையங்கள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் நாளிதழ் அலுவலகக் கட்டடத்தைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் நாளிதழின் தலைமை ஆசிரியர், 30 செய்தியாளர்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் 131 பேர் காயமடைந்தனர் என்று ஏமனின் ஹவுதி படையினர் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ''இந்த தாக்குதல் மிருகத்தனமானது மற்றும் நியாயமற்றது'' என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.