மும்பை, ஆகஸ்ட்.28-
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பொன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள விரார் கிழக்கில் ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்தது. இங்கு 4வது மாடியில் குழந்தையொன்றின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர். அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, தாயார் உட்பட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.