ஆஸ்டின், ஆகஸ்ட்.12-
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள கார் நிறுத்தம் பகுதியில் நுழைந்த மர்ம நபர், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.
என்ன நடக்கிறது என்பது புரியாமல் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர், பின்னர் அங்கிருந்த காரை எடுத்துக் கொண்டுத் தப்பித்தார். மின்னல் வேகத்தில் காரை இயக்கிய அந்நபர், சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
பின்னர், அங்குள்ள மற்றொரு காரை திருடி எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் யார் என்ற விவரங்களைப் போலீசார் வெளியிடவில்லை. அவர் சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தோன்றுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.