கொழும்பு, ஆகஸ்ட்.23-
அரசு நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நீண்ட காலமாக அந்த நாட்டு அரசியலில் இருக்கிறார். அந்த நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர். இலங்கை பொருளாதார ரீதியாக திவால் நிலையை அடைந்த போது, அதிபராகப் பொறுப்பேற்று மீண்டும் நிலைமையைச் சீர்படுத்தியவர்.
ரணில் அதிபராக இருந்த போது 2023ல் அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இதையொட்டி, ரணில், அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் லண்டன் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்திற்காக அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளான ரணில் விக்கிரமசிங்கே நேற்று குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஐ.சி.யு. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இலங்கையில், முன்னாள் அதிபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லை. தற்போது தான் முதல் முறையாக முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ரணிலை அரசியலில் இருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் இந்தச் செயலில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.