பாட்னா, ஜூலை.16-
பாட்னா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கும் போது நூலிழையில் விபத்தில் இருந்து தப்பிய சம்பவம் தெரிய வந்துள்ளது. தலைநகர் டில்லியில் இருந்து பாட்னாவுக்கு இண்டிகோ விமானமொன்று,மொத்தம் 173 பயணிகளுடன் புறப்பட்டது. பாட்னா விமான நிலைய ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் ஓடுபாதை தளத்துக்கு முன்னரே விமானத்தை விமானிகள் தரையிறக்கினர்.
விமானம் தரையிறங்கிய பின்னர், மீதமுள்ள ஓடுபாதையின் நீளம் விமானத்தை நிறுத்த போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக விமானத்தை மேல் நோக்கி எழும்பச் செய்தார். மீண்டும் வானை நோக்கி பறந்த விமானம் மூன்று முறை வட்டமடித்தது.
பின்னர் சிறிது நேரம் கழித்து பாதுகாப்பாக ஓடுபாதையில் விமானம் தரையிறங்கியது. அதில் இருந்த 173 பயணிகளும் மயிரிழையில் உயிர் தப்பினர்.








