ஜகார்த்தா, அக்டோபர்.07-
இந்தோனேசியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் அந்நாட்டை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோவார்ஜோ நகரில் அல் கோசினி என்ற முஸ்லிம் பள்ளி இயங்கி வருகிறது. அண்மையில், அந்த வளாகத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதைந்தனர்.
இவ்விபத்தில் இதுவரை மாணவர்கள் 61 பேர் பலியானது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அவர்களில் பெரும்பாலானோர், 12 முதல் 19 வயதுக்குட்பட்டோர். கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.