காஸா, ஜூலை.13-
பாலஸ்தீனத்தின் காஸாவில் கடந்த 21 மாதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்த்கைத் தாண்டியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்., 7 ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதில், இஸ்ரேலை சேர்ந்த 1,200 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸாவில் இஸ்ரேல் ராணுவம், விமானப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இடையில் கட்டார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், அதனைக் கடைபிடிக்கவில்லை என இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டின.
இதனையடுத்து மீண்டும் போர் தொடங்கியது. இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. தற்போது இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டு வர காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தப்படும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டுச் சரணடைய வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால், இதனை ஏற்காத ஹமாஸ் அமைப்பினர், தங்கள் பிடியில் உள்ள எஞ்சிய பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயாராக உள்ளதாக மட்டும் கூறினர். இதனால், போர் நிறுத்தம் ஏற்படுவதில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 21 மாதமாக காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.








