சித்ரா மஹ்கோட்டா என்ற செம்பனைத் தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், நேற்று காலை மெலாவியில் இருந்து புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மேத்யூ ஏர் நுசந்தாரா நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த அந்த ஹெலிகாப்டரில், இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 8 பேர் இருந்தனர்.
இன்று காலை இந்தோனேசிய மீட்பு முகமை வெளியிட்ட தகவலின்படி, விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் செகாவ் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்டன. செங்குத்தான மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த காடுகள் நிறைந்த இடம் என்பதால், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் செல்வதில் கடும் சவால்களை எதிர்கொண்டனர்.
இருப்பினும், இன்று காலை நிலவரப்படி ஹெலிகாப்டரில் இருந்த எட்டுப் பேரும் உயிரிழந்துவிட்டதை மீட்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை விபத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் இராணுவம், காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் சமீப காலங்களாக விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் சுலாவேசித் தீவில் நடந்த ஒரு விமான விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இத்தகைய தொடர்ச்சியான விபத்துகள் நாட்டின் வான்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளன.








