மாலே: மாலத்தீவில் சீனா ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் அதிபரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது. வெறும் 5.21 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட மாலத்தீவு இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. ஆனால், கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் தலைகீழாக மாறியது.
சீனா ஆதரவு நிலைப்பாடு கொண்ட அதிபர் முகம்மது முய்சு அதிபராக பதவியேற்ற பின் அந்த நாடு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டியது. இது ஒருபக்கம் இருக்க, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் நடந்து கொண்டது அமைந்தது. அதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு சென்றார்.
உறவில் விரிசல்: லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடி தொடர்பாக இனவெறியுடன் கருத்துக்களை கூறி விமர்சித்தனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. இந்தியர்கள் பலரும் மாலத்தீவு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததை ரத்து செய்தனர்.