வியட்நாமின் குய் நொன் துறைமுகத்தில், ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1,193 கிலோ யானைத்தந்தமும், 79 கிலோ விலங்கு எலும்புகளும் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 9ஆம் தேதி துறைமுகத்தை வந்தடைந்த மூன்று கொள்கலன்களில், அறுக்கப்பட்ட மரக்கட்டைகளுக்குள் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்ட சரக்குகளை, சுங்கத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆகஸ்ட் 6 முதல் 8ஆம் தேதி வரை சோதனையிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் யானை குடும்பத்தையும், பூனை குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளையும் சார்ந்தவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் சைட்ஸ் எனப்படும் அழிவுநிலை வனவிலங்குகளுக்கான அனைத்துலக வர்த்தக ஒப்பந்தத்தின் பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சம்பவம் மத்திய வியட்நாம் பகுதியில் சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய வனவிலங்கு கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகவும், குய் நொன் துறைமுகத்தில் பதிவான முதல் பெரிய சம்பவமாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








