கோலாலம்பூர், அக்டோபர்.28-
கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto, மாநாடு நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே தாயகம் திரும்பியதற்கு மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான RTM செய்தி அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல என்று இந்தோனேசியத் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தோனேசியாவின் உள்ளூர் விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல்கள், அடர்த்தியாக இருப்பதால் அதிபர் Prabowo Subianto, அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் என்று மலேசியாவிற்கான இந்தோனேசியத் தூதர் Yvonne Mewengkang தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆசியான் உச்சநிலை மாநாட்டு குறித்து நேரடி ஒளிபரப்பு செய்த ஆர்.டி.எம்.மின் செய்தி அறிவிப்பாளர், இந்தோனேசியாவின் நடப்பு அதிபர் Prabowo Subianto –வின் பெயரை உச்சரிப்பதற்குப் பதிலாக முந்தைய அதிபர் Joko Widodo பெயரைக் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு ஆர்.டி.எம். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.








