ஹெர்ஸகோவினா, நவம்பர்.05-
ஐரோப்பிய நாடான போஸ்னியாவில், முதியோர் இல்லத்தில் தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். வடக்கு போஸ்னியா நகரம் துஸ்லா. அங்கு அந்த முதியோர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் 7வது தளத்தில் எதிர்பாராத விதமாகத் தீப் பிடித்தது.
மளமளவென தீ மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. அங்கே இருந்தவர்கள் வயது முதிர்வு காரணமாக வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.
அது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மீட்புப் பணியில் இறங்கினர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எதனால் தீப் பிடித்தது என்பது பற்றிய காரணம் தெரியவில்லை. இருப்பினும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறி உள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த அந்நாட்டு பிரதமர், இது மிகப் பெரிய ஒரு பேரழிவு என்று வேதனை தெரிவித்துள்ளார்.








