ஈரான், ஜனவரி.13-
ஈரானில் பொருளாதார நெருக்கடி, நாணய மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஆத்திரமடைந்துள்ள பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமை மோசமடைந்ததால், ஈரான் மத்திய வங்கி ஆளுநராக இருந்த முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஈரான் முன்னாள் நிதியமைச்சர் அப்துல் நாசல் ஹெம்மாட்டி மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அரசுக்கு எதிராக தலைநகர் தெஹ்ரான் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளில் இதுவரை 544 பேர் பலியாகியுள்ளனர்.
இரண்டு வாரமாக நீடிக்கும் போராட்டங்களில் இதுவரை 10,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் தலைநகர் தெஹ்ரானில் அரசுக்கு ஆதரவாகவும் ஏராளமானோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஈரான் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவாக லாஸ் ஏஞ்சல்சிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோதுவது போல் வந்த ஒரு டிரக்கின் ஓட்டுநரை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர்.








