கோலாலம்பூர், அக்டோபர்.27-
மலேசியா உண்மையிலேயே ஓர் அற்புதமான நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழ்மாலை சூட்டியுள்ளார்.
கோலாலம்பூரில் மலேசியா ஏற்று நடத்திய 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டு, சிறப்பித்த பின்னர் இன்று புறப்படுவதற்கு முன்னதாக, மலேசியா மிக அற்புதமான, ஒரு துடிப்பு மிகுந்த நாடு என்று வர்ணித்தார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட டிரம்ப், இன்று திங்கிட்கிழமை ஜப்பான் புறப்பட்டார். அதற்கு முன்னதாக தனது சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் மலேசியாவைப் பற்றி தனது எண்ண அலைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
எல்லைத் தகராறு தொடர்பாக எழுந்த போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திடும் சடங்கையும் டிரம்ப் நேரில் கண்டார்.
இந்த அமைதி ஒப்பந்தம் சுமூகமாக நடைபெறுதற்கு மத்தியஸ்தம் செய்து வைத்த மலேசியாவையும், ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமையும் டிரம்ப் வெகுவாகப் பாராட்டினார்.








