காபூல், செப்டம்பர்.02-
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குனார் மாகாணத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:47 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது. இதைத் தொடர்ந்து 4.7 - 4.3 - 5.0 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கமும் பல நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
நள்ளிரவு நேரம் என்பதால் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து, பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் நில அதிர்வுகளில், குனார் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்கள் முற்றிலுமாக உருக்குலைந்து போயின.
நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டதால், மக்கள் அச்சத்தில் திறந்த வெளிகளில் தஞ்சம் புகுந்தனர். மண் மற்றும் கல் வீடுகளால் ஆன பகுதி என்பதால், நிலநடுக்கத்தின் சக்தியைத் தாங்க முடியாமல் வீடுகள் எளிதில் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாக ஆகக் கடைசி தகவல் கூறுகிறது. மேலும் 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.